20/10/2025
காஞ்சிபுரம் கல்வெட்டுகளில் தீபாவளி...
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் விஜயநகரர் காலத்தில் (கி.பி.14-16 ஆம் நூற்றாண்டுகளில்) ஏராளமான திருப்பணிகள் நடந்துள்ளன. இரண்டாம் வீர கம்பணன், சாளுவ நரசிம்மராயர், வீரநரசிங்க தேவராயர், கிருஷ்ணதேவராயர், அச்சுததேவ மகாராயர் உள்ளிட்ட விஜயநகர மன்னர்களின் காலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இங்கு இருக்கின்றன.
கோயிலுக்கு வழங்கப்பட்ட பொன், பொருள், நிலம் உள்ளிட்ட தானங்கள், கொடையாளர்கள், கோயில் பணியாளர்கள், தானமாக வழங்கப்பட்ட ஊர்கள், படையல் உணவிற்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், உப்பு, புளி, மிளகு, சீரகம் போன்ற பொருட்களின் நீண்ட பட்டியல்கள் கல்வெட்டுகளில் விலாவாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இறைவனுக்கான அமுது படையலில் இட்டலி, தோசை, வடை, அப்பம், பணியாரம், அதிரசம் ஆகியவை முக்கிய இடம் பிடித்திருந்தன.
சதாசிவதேவ மகாராயர் கல்வெட்டில் (கி.பி.1555) ஆழ்வார்கள் மற்றும் பெரிய ஜீயர் பிறந்த நட்சத்திரங்களில் திருவிழாக்கள் நடத்தப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்கள் ஒவ்வொருவரது பிறந்த நட்சத்திரமும் தனித்தனியே இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டில் 100 நாட்கள் நடத்தப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி, திருக்கார்த்திகை, விஜயதசமி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்களின் பட்டியலும் கி.பி.1558ஆம் ஆண்டு கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன.
கோயில் திருவிழாக்களைப் பட்டியலிடும் கிருஷ்ண தேவராயர் கல்வெட்டில் (கி.பி.1521) ‘தீபாவளி’ இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அச்சுதேவ மகாராயர் கால கல்வெட்டுகள் (கி.பி.1533, 1537), சதாசிவ மகாராயர் (கி.பி.1553) கல்வெட்டு மற்றும் ஆண்டு விவரம் அறிய இயலாத கல்வெட்டு ஒன்றிலும் தீபாவளி திருனாள், தீபாவளி னாள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 504 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது எனும் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது.
தீபாவளி குறித்து திருமலை திருப்பதி பெருமாள் கோயிலில் உள்ள கி.பி.1542 ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டு மட்டுமே இதுவரை ஆதாரமாக இருந்து வந்தது. தற்போது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலும் தீபாவளி குறித்த புதிய தகவலை நமக்குத் தெரிவித்துள்ளது.
அன்புடன்,
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்