05/02/2026
கல்வராயன் மலை
தமிழகத்தில் ஒரு பகுதி இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் முப்பது ஆண்டுகள் கழித்து சுதந்திரம் பெற்ற இடம் ஒன்று உண்டு. அது கல்வராயன் மலை தான். நிலவியல் அடிப்படையில் கொங்கு நாட்டையும், நடு நாட்டையும் பிரிக்கும் முக்கிய கண்ணி. இதன் பொருட்டோ என்னவோ இங்கு மகேந்திரர் காலத்திய நடுகல்லும், சோழர் கால செக்கும், கோவிலும் உள்ளன.
கிருஷ்ண தேவராயரின் படைத்தளபதியாக இருந்த கல்வராயனின் வீரத்தை போற்றி கிருஷ்ண தேவராயர் அவருக்கு இந்த நிலப்பகுதியை தானமாக வழங்கியதாகவும், அதன் பொருட்டே இம்மலைக்கு கல்வராயன் மலை என பெயர் வந்ததாகவும் ஒரு கூற்று உண்டு.
விஜயநகர ஆட்சிக்காலத்தில் இம்மலை பாளையங்களாக பிரிக்கப்பட்டு இருந்ததாக தகவல் உண்டு. அதன்பின் ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் அரியக்கவுண்டன் ஜாகீர் என்பவருக்கு நவாப்பால் இம்மலை முழுவதும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆர்க்காடு நவாபிடம் ராணுவத்தில் வேலை செய்தவர். இவரின் சிறப்பான சேவைக்காக அரியக்கவுண்டனுக்குக் கல்வராயன்மலை ஜாகீர் உரிமை நவாப்பால் வழங்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக மேலும் 4 ஜாகீர்கள் உறவின்முறை காரணமாகவும், ஊழியத்தின் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயருக்குச் சாதகமாக நடக்க ஒப்புக் கொண்டதால் ஐந்து ஜாகீர்களுக்கும் இம்மலைப்பகுதி அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களாக ஆங்கிலேயர்களால் பட்டயங்கள் வழங்கப்பட்டன. இம்மலைவாழ் மக்கள் ஜாகீர்தார்களுக்குக் கொத்தடிமைகளாக இருந்து வந்தனர்.
1947இல் இந்தியா விடுதலை பெற்றாலும் இந்த மலைவாழ் மக்களுக்கு அந்த நாள் விடுதலை நாளாக அமையவில்லை. சுதந்திர நாட்டிலும் இம்மக்கள் தொடர்ந்து ஜாகீர்தாரின் கொத்தடிமைகளாகவே இருந்து வந்தனர்.
1963 ஆம் ஆண்டு அரசு ஜாகீர்தார் ஆட்சியை இம்மலைப்பகுதியில் ஒழிக்க முயற்சி செய்தது. ஆனால் இவர்கள் அரசுக்கு இணங்காமல் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்ற ஜாகீர்தார்களுக்கு எதிராக அப்போதைய தென்னார்க்காடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பத்மநாபன் அவர்களின் முயற்சியால் ஜாகீர்தார்கள் 14.08.1976 ஆம் ஆண்டு நீதி மன்றத்திலிருந்து எவ்வித நிபத்தனையுமின்றி வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொண்டு அரசிடம் இம்மலைப் பகுதிகளைக் கொடுத்து விடுவதாக ஒப்புக் கொண்டார்கள்.
இதன்படி 25.8.1976ல் ஜாகீர்தாரர்களின் மலைப்பகுதிகளின் நிர்வாகத்தை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. உண்மையில் இதுவே இவர்களின் சுதந்திர நாள். அதன் பின்பே அரசும் அரசு நிர்வாக அலுவலகங்களும் மேலே சென்றன. பின் வெள்ளிமலையைத் தலைமையாக ஒன்றியமும் ஒன்றிய அலுவகமும் 1985ல் அமைக்கப்பட்டது.
திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் கல்வராயன் மலை மரபு நடையில் பங்கு பெற
https://forms.gle/EwZvwwgDjydbL6769